முல்லை திணை

Thursday, October 15, 2015

முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது


முல்லைத்திணை
முல்லை என்பது காடும் காடு சார்ந்த நிலங்களும் ஆகும். இந்நிலத்து ஆயர்களது வாழ்வியல், ஆடவர் ஆனிரை (பசுக்கள்) மேய்த்தற்கு பகற்பொழுது எல்லாம் காட்டிடத்தே இருத்தல், மகளிர் பால், பயன்களை விற்று வருதல் போன்ற ஒழுக்கத்தோடு ஒட்டியதாகும். ஏறு தழுவி வெல்பவனுக்கே மகளைத் தரும் வழக்கமும், அவனையே விரும்பி ஏற்கும் கன்னியர் மனமும் இத்திணையின் சிறப்பான மரபுகள். இதனால் காத்திருத்தல் தன்மை இயல்பாக, 'இருத்தல், இருத்தல் நிமித்தம்' முல்லைத்திணைக்கு உரிமையாக்கி உள்ளனர். முல்லைத்திணைக்கு கார் காலம் பெரும்பொழுதாகவும் மாலை சிறுபொழுதாகவும் அமையும்.

முல்லையின் கருப்பொருட்கள்:


கடவுள்

மாயோன் (திருமால்)


மக்கள்

குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்


புள்

காட்டுக்கோழி


விலங்கு

மான், முயல்


ஊர்

பாடி, சேரி, பள்ளி


நீர்

குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)


பூ

குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ


மரம்

கொன்றை, காயா, குருந்தம்


உணவு

வரகு, சாமை, முதிரை


பறை

ஏறுகோட்பறை


யாழ்

முல்லை யாழ்


பண்

முல்லைப்பண்


தொழில்

சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.



முல்லைத்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "வினைமுடிந்து மீளூம் தலைவன் தேர்ப்பாகற்கு சொல்லியது"

No comments:

Post a Comment